சனி, 13 செப்டம்பர், 2014

கடன் தள்ளுபடி

தன்னுடைய வாரிசுகளுக்கு தேவைக்கு அதிகமாகவே சொத்துகளை உயில் எழுதி வைத்த பிறகும் பிரச்னை தீராத மனிதனின் நிலை போல, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.
"உன் வாரிசுகளுக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாயா' என்று ஒரு மனிதனிடம் அவனது நண்பர் கேட்டார். அதற்கு அவன் பதில் கூறினான்: "அந்தக் கவலை எனக்கில்லை. நகரின் பிரதான பகுதியில் உள்ள கட்டடங்கள், வீட்டுமனைகள் என கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை எனது நான்கு குழந்தைகளுக்கும் எழுதிவைத்துவிட்டேன்'.
அடுத்தவர் பிரச்னையில் அதீத ஆர்வம்காட்டும் அந்த நண்பர் மீண்டும் கேட்டார்: "அப்புறம் என்ன கவலை?' நண்பர் பதிலளித்தார்: "இப்போதோ நான் பிச்சைக்காரன் போல உள்ளேன். என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை' என்றாராம்.
இந்த நகைச்சுவை துணுக்கை அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார்.
உத்தேசமாக ரூ.45 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று ஆந்திர முதல்வரும், ரூ.19 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று தெலங்கானா முதல்வரும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல.
தங்களின் தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இரு முதல்வர்களுக்கும் நெருக்கடி அதிகரித்தபோது, வழிகாட்டு நெறிமுறைகளை இருவரும் அறிவித்தார்கள். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் குறித்து அவர்கள் மூச்சு விடவே இல்லை. ஒரு ரூபாய்கூட இல்லாதவன் எப்படி கோடிக்கணக்கான சொத்துகளை கற்பனையிலேயே உயில் எழுதிவைத்தானோ, அதுபோலவே உள்ளது இவர்களது அறிவிப்புகளும்.
ஆந்திரத்தில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் ரூ.1.5 லட்சம் வரையிலும், தெலங்கானாவில் ரூ.1 லட்சம் வரையிலும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்த நேரத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை இருவரும் அள்ளி வீசிவிட்டனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள் தொடர்பான குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: போட்டியிடுபவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதிகள் நம்பகத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதிகள் செயல்படுத்தத்தக்கதாகவும், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் பொதுவான வகையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ, அத்தகைய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும்போது, அதை உண்மையிலேயே செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அப்போது, மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வர்த்தக வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் வில்லன்களாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
கொடுத்த கடன்களைத் திருப்பி வசூலிப்பதில் நீக்குபோக்குடன் நடந்து கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் மூலம் அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில், நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியையும், வர்த்தக வங்கிகளையும் குறை சொல்வது நியாயமற்றதாகும். பொது மக்களிடம் இருந்து வைப்புத் தொகைகளைப் பெறும் வர்த்தக வங்கிகள், பணம் தேவைப்படுவோருக்கு அதில் இருந்து கடன் அளிக்கின்றன. பெறப்படும் வைப்புத் தொகைக்கும், அளிக்கப்படும் கடன் தொகைக்கான வட்டிக்கும் உள்ள வித்தியாச தொகையே வங்கிகளின் நிர்வாகச் செலவு, லாபமாக உள்ளது.
வங்கிகளில் கடன் பெறுபவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வைப்புத் தொகை செலுத்துபவர்களின் தேவைகளை வங்கிகளால் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளால் முடியாதது. அந்தக் கடன்களுக்கான உத்தரவாதத்தை அரசு ஏற்றால், வங்கிகள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராகக் கடன்களைத் தள்ளுபடி செய்யவோ, மறுசீரமைப்பு செய்யவோ வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ள முடியாது. விவசாய உற்பத்தி, வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாக இருந்தால் மட்டுமே விவசாயக் கடன்களை மறு சீரமைப்பு செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்க முடியும்.
கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டுள்ளதால், ஆந்திரத்தில் மொத்தம் உள்ள 653 மண்டலங்களில் 120-லும் (ஊராட்சி ஒன்றியம்), தெலங்கானாவில் 475 மண்டலங்களில் 100-லும் கடன் மறுசீரமைப்பு செய்ய ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே, அரசின் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்ட முடியாது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கும்படி அரசியல்வாதிகளிடம் ரிசர்வ் வங்கி எப்போதும் கூறியதில்லை.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்பதற்காக இவற்றைக் கூறவில்லை. இந்தத் திட்டங்கள் முறையாக சிந்தித்து அறிவிக்கப்படவில்லை என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்த அளவே நன்மை தரக் கூடியது என்பதற்காகவுமே இவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
முதலாவதாக, இப்போதைய கடன் தள்ளுபடியுடன் சேர்த்து, இனி எப்போதுமே விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவை என்று கோரிக்கை விடுக்காத வண்ணம் விவசாயத்தை மேம்படுத்த, இந்த இரண்டு மாநிலங்களிலுமே தெளிவான திட்டம் வகுக்கப்படவில்லை.
இரண்டாவதாக, இந்தக் கடன் தள்ளுபடித் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட (வங்கிகள் போல) நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். 73 சதவீத விவசாயிகள் தனியாரிடமிருந்தே கடன் பெறுவதால், அவர்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை.
மூன்றாவதாக, ஒரு மாநிலத்தில் ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி என்றும், மற்றொரு மாநிலத்தில் ரூ.1.5 லட்சம் கடன் தள்ளுபடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அறிவியல்பூர்வ அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படவில்லை.
இறுதியாக, இந்தத் திட்டத்துக்கு நிதி ஆதாரத்தைக் கண்டுபிடித்தால் கூட, இதை அமல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருந்தால், கடன் தள்ளுபடி என்பது சிக்கலாகிவிடும்.
இந்த இரு மாநிலங்களிலும், கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு நன்மை செய்வதைவிட தீங்காகவே ஆகியுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில், கடன் பெற்ற விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
கரீப் பருவம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கிகள் புதுக் கடன்களை வழங்க மறுத்துவிட்டன. இதனால், கரீப் பருவ சாகுபடிக்கு தனியார் நிறுவனங்களிடம் கடன் பெறும் நிலை அல்லது கரீப் பருவ சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
இந்த இரு மாநிலங்களிலும் கிடைத்த அனுபவம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
தேர்தலை மட்டுமே மனத்தில் கொள்ளாமல், நலிவுற்ற விவசாயிகளுக்கு சரியான விதத்தில் உதவ வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில் இப்போதைய நிலையை அலசி ஆராய்ந்து ஒருங்கிணைந்த முழுமையான ஒரு திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

தன் மாநிலத்தில் இருந்த, இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி

சமீபத்தில் ஒரு பள்ளியில் சுதந்திர தின விழா, திருவிழா போலக் கொண்டாடப்பட்டது. மிகவும் உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் மாணவ, மாணவியர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு, செல்போனின் தீமைகள் போன்றவை குறித்த நாடகங்கள் மற்றும் திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, அரங்கத்தில் இருந்த பொதுமக்களும், மாணவ, மாணவியரும் ஆடாமல் அசையாமல் நின்று மரியாதை செலுத்தியபோது, மேடையின் பின்புறம் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் வேடங்களைக் கலைப்பதிலும், அவர்களின் பெற்றோர்கள் அவற்றைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்புவதிலும் குறியாக இருந்தனர்.
தேசிய கீதம் முடிந்தபின் ஒரு மாணவரிடம் தேசிய கீதம் பாடும்போது இப்படிச் செய்யலாமா எனக் கேட்டேன். அதற்கு அந்த மாணவர் "இவ்வளவு நேரம் சிறப்பாக நிகழ்ச்சிகள் செய்தோம். இப்போது தேசிய கீதம் போட்டுவிட்டார்கள் என்றால் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்? அதான் சீக்கிரமாக வேஷத்தைக் களைத்துக் கொண்டு கிளம்பத் தயாராகிறோம். இன்னைக்கு டி.வி.யில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கு' எனப் பதில் அளித்தார்.
மாணவர்களைப் பொருத்தவரையில், சுதந்திர தினம் என்பது மற்ற விடுமுறை தினங்களைப் போல ஒரு விடுமுறை தினம்தான். கூடுதல் போனஸாக அன்று தொலைக்காட்சியில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் காணலாம்.
இன்றைய இயந்திரமயமான உலகில் தேசிய கீதம் என்பது ஒரு பாடல்; அந்தப் பாடலைப் போடும்போது அசையாமல் நிற்கவேண்டும் என்றுதான் தெரிந்திருக்கிறதே தவிர, அது நமது தேசிய கொடிக்கும், நாட்டுக்கும் அளிக்கப்படும் மரியாதை என்பது தெரியவில்லை.
தேசிய கீதம் இசைக்கப்பட்டால், நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டதாக அர்த்தம் என்ற அளவுக்குதான் தேசிய கீதத்தை பற்றி இன்றைய மாணவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இதற்கு மாணவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. முன்பெல்லாம் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தவுடன் தேசிய கீதம் ஒலிக்கும். ஆனால், யாரும் அதற்கு மதிப்பளிக்காததால் காலப்போக்கில் தேசிய கீதம் ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது
இன்றைய தேதியில் தேசப்பற்று என்பது கிரிக்கெட் போன்ற ஒருசில விளையாட்டுகளில் மட்டும்தான் இருக்கிறது. இந்தியா எந்தவொரு நாட்டுடன் விளையாடினாலும் இந்தியாதான் ஜெயிக்க வேண்டும் என்ற (விளையாட்டுத்தனமான) தேசப்பற்றுதான் நிறைந்திருக்கிறது.
விளையாட்டை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, நிஜ நாட்டுப்பற்றைத்தான் விளையாட்டுத்தனமாக மாற்றிவிட்டோம்.
மாணவர்களின் இத்தகைய சிந்தனைகளுக்கு நமது கல்வி முறையும் ஒரு காரணம். பாடப் புத்தகங்களில் தேசத் தலைவர்களின் தியாகங்களைப் பாடங்களாக வைத்துள்ளோம் என்பது உண்மைதான்.
ஆனால், மாணவர்கள் அவற்றை மதிப்பெண் நோக்கில் படிக்கிறார்களே தவிர, உணர்ந்து படிப்பதில்லை. உணர்ந்து படித்தால்தான், சுதந்திரம் என்றால் என்ன, அதை அடைவதற்கு நாம் என்ன பாடுபட்டோம் என்பது அவர்களுக்கு விளங்கும்.
இன்று மாணவர்களிடம், "உனக்குத் தெரிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பெயர்களைக் கூறு' என்றால், "மகாத்மா காந்தி', "நேரு', "சுபாஷ் சந்திரபோஸ்' என்று கூறுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.
தன் ஊரில், தன் மாவட்டத்தில், தன் மாநிலத்தில் இருந்த, இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.
தொலைக்காட்சிகள் நடிகர், நடிகைகளின் பேட்டிகளுக்குப் பதிலாக தியாகிகளை கௌரவிக்கும்விதமாக, அவர்களின் சுதந்திரப் போராட்ட அனுபவங்களை ஒளிபரப்பலாம்.
மாணவர்களுக்கு வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ ஏதேனும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் குறித்து சிறப்புரை நிகழ்த்தி, அது தொடர்பாக அவர்களிடம் கேள்வியெழுப்பி, மாணவர்களின் ஐயங்களைப் போக்கி, அவர்களைத் தெளிவடையச் செய்யவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை தங்கள் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர்களின் சுதந்திரப் போராட்ட அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளச் செய்யவேண்டும். இது மாணவர்களுக்கு நமது சுதந்திரத்தின் உன்னதத்தை உணர்த்தும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த கல்வித் துறை முன்வர வேண்டும்.

அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலா 3 மாணவ } மாணவியர் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினைச் சேர்ந்த தலா 2 மாணவ } மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து படிக்க தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது.
மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், பராமரிப்பு கட்டணம், விடுதிக் கட்டணம், சிறப்பு பயிற்சி கட்டணம் என ஆண்டொன்றுக்கு ரூ.28 ஆயிரம் வீதம், 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களை சிறப்பாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.
பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைத் தவிர்த்து, சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் என பல்வேறு வழிகளில் பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதால் சில அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு பாடங்களை முழுமையாக நடத்துவதில்லை. அதற்கு பதிலாக பத்தாம் வகுப்பு பாடங்களை, ஒன்பதாம் வகுப்பின் 2ஆம் பருவ தேர்வுக்கு பின் நடத்துகின்றன.
மேலும் சுயநிதிப் பள்ளிகளில், கல்வி தரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கின்றனர். 100 சதவீத தேர்ச்சி என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வெளியேற்றிவிடுகின்றனர்.
இறுதிக் கட்டத்தில் அவர்களுக்கு புகலிடம் அளிக்கும் இடமாக அமைவது அரசு பள்ளிகள் மட்டுமே. அப்படி வந்து சேரும் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 500 முதல் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்று 98 முதல் 100 சதவீத தேர்ச்சியை பல அரசு பள்ளிகள் பெற்றுள்ளன என்பது முடிவுகளை உற்று நோக்கியவர்களுக்கு புரியும்.
20 முதல் 200 மாணவர்களுடன் பங்கேற்கும் சுயநிதிப் பள்ளிகளுக்கு மத்தியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களை சிறப்பாக வழி நடத்தி சாதித்துக் காட்டிய அரசு பள்ளிகளின் தரம் மெச்சத் தகுந்ததே.
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களை, பல்வேறு சலுகைகளுடன் தங்கள் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பதற்கு தனியார் பள்ளிகள் போட்டிபோடுவது வழக்கம். தற்போது மாவட்ட வாரியாக 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பிரபல சுயநிதிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு அரசே உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கையால், அரசுப் பள்ளிகளின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் நியாயமாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்துள்ள மாணவர்களை, தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் வெளியேற்றி விடுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த தரமான மாணவர்கள், சுயநிதி பள்ளிகளுக்குச் சென்றுவிட்டால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவதைத் தடுக்க முடியாது. அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.
கடந்த காலத்தைவிடத் தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அனைத்து அடிப்படை வசதிகளும் அரசுப் பள்ளியில் கிடைக்க வேண்டும்.
அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அரசு பள்ளிகளிலேயே படிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுயநிதி பள்ளியில் சேர்ந்து படிக்க வழங்கப்படும் உதவித் தொகையை, அவர்களுடைய தகுதிக்கான பரிசாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி பள்ளிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய சூழ்நிலையும், அங்கு கற்பிக்கப்படும் வழிமுறைகளும் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, இந்த நடைமுறையை மாற்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த கல்வித் துறை முன்வர வேண்டும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

திறமையான முதல்வராக உருவாகி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வகுத்துத் திறம்பட நிர்வகிப்பது வேறு

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை டாடா நிறுவனம் உபயோகித்து புதிய வகை "நானோ' எனும் சிறிய மோட்டார் வாகனத்தைத் தயாரிக்க முயற்சித்தபோது, மிகப் பெரிய அளவில் நில உரிமையாளர்களின் எதிர்ப்பு உருவாகி, அந்தத் தொழிற்சாலையே குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டது.
அந்தப் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
புதிய அரசு பெரிய தொழிற்சாலைகளை ஆதரிக்காது என்ற எண்ணம் பரவலாகி, அந்த மாநிலத்தில் எந்தவிதமான புதிய தொழிற்சாலையும் தொடங்கப்படாததோடு, ஏற்கெனவே அங்கே இயங்கும் தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலைமை உருவாகியது.
இது அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்தது. இதை சரி செய்யும் முதல் முயற்சியாக, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று, அந்நாட்டின் பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
"கோல்டோர் எனும் ஊரில் 1,000 ஏக்கர் நிலம் புதிய தொழிற்சாலைகளை அமைக்க தயாராக மாநில அரசின் வசம் உள்ளது' என அறிவித்துள்ளார். கோல்டோர் எனும் கிராமம், மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. கொல்கத்தா நகரிலிருந்து 185 கி.மீ. தூரம். இந்த நிலம் 950.17 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
1965-ஆம் ஆண்டு இந்த நிலத்தில் 310 ஏக்கர் பரப்பளவில் சணல் பயிரிட்டு, அம் மாநிலத்தின் மிக முக்கியமான விவசாயப் பயிரான சணலின் உற்பத்தியையும், திறனையும் எப்படி பெருக்கிக் கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது.
ஆனால், எந்த வேலையும் நடைபெறாமல் செயலற்ற நிலையில் அந்த மையம் இருந்து வந்தது. எனவே, அந்த நிலப்பரப்பை மேற்கு வங்க தொழில் வளர்ச்சி கழகத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை உடனடியாக புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் அன்னிய நிறுவனங்களுக்கு வழங்க முடியுமா என்பதை அறிய ஒரு ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த சில நிருபர்கள் விசாரணையில் இறங்கி தகவல்களை சேகரித்தனர்.
அதன்படி, இந்த மாநில முதல்வர் குறிப்பிட்ட 1,000 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் 600 குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிசைகளை அமைத்துள்ள ஆக்ரமிப்பாளர்கள் பிழைப்பு தேடி கிராமப்புறங்களிலிருந்து குடி பெயர்ந்து கோல்டோர் நகருக்கு வந்தவர்கள்.
இந்த ஆக்ரமிப்பாளர்கள் கூறுகின்றனர்: "முதல்வர் மம்தா பானர்ஜி, நிலங்களை கைப்பற்றி கார் தொழிற்சாலையை சிங்கூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர். அப்படிப்பட்டவர் எங்களை நிலத்திலிருந்து வெளியேற்றித் தொழிற்சாலைகளை அமைக்க உத்தரவிடுவார் என நாங்கள் நம்பவில்லை'.
மேலும், சணல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விவசாய ஆராய்ச்சி மையம், 15 பெரிய கட்டடங்களை இந்த நிலத்தில் கட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்குவதும், இங்கே பணி செய்யும் அரசு ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவிடுவதும் உடனடியாக நடக்கும் காரியமல்ல எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் சந்திரக் கோனா சாலை துணை மின் நிலையம் 29 கி.மீ. தூரத்தில் உள்ளது. சம்மபந்தப்பட்ட 1,000 ஏக்கர் நிலத்தில் கனரக தொழிற்சாலைகளைத் தொடங்க 132 கே.வி. திறனுடனான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக ஒரு துணை மின்நிலையம் இந்த நிலத்தின் அருகில் உடனடியாக நிறுவப்பட வேண்டும். உயரழுத்த மின்சாரக் கம்பிகளுடன் 29 கி.மீ. தூரத்திலிருந்து மின்சாரத்தை இந்த நிலப் பகுதிக்கு கொண்டு வரவும், அங்கேயே ஒரு துணை மின் நிலையத்தை உருவாக்கவும் குறைந்தது 6 மாத காலம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆக, இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுள்ள ஒரு நிலத்தை ஏற்றுக் கொண்டு, கனரகத் தொழிற்சாலைகளை எங்கள் மாநிலத்தில் நிறுவுங்கள் என சிங்கப்பூர் அரசையும் அங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்களையும் மேற்கு வங்க முதல்வர் கேட்டுக் கொள்வது நம்மில் பலருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை உருவாக்குகிறது.
மம்தா பானர்ஜி தூய்மையான, ஊழலற்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கும் ஓர் அரசியல் தலைவர். நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர் போன தரமான இடதுசாரித் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து, அதில் வெற்றி பெற்று அரசமைத்தவர்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், நிர்வாகத்தை சரியான முறையில் புரிந்து கொண்டு தனது வளர்ச்சித் திட்டங்களை வகுத்துள்ளாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக அடித்தட்டு மக்களின் ஆட்சியாக நடந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில், அரசு ஊழியர்களையும், நில ஆக்கிரமிப்புகள் செய்துள்ள கீழ்த்தட்டு மக்களையும் சட்ட விதிமுறைகளின்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவில்லை.
உதாரணமாக, இந்த நிலத்தில் உள்ள 600 குடிசைகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நம் மாநிலத்தில் கிராம அதிகாரிகளால் வழங்கப்படும் பி-மெமோ எனப்படும் தாக்கீது கூட வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனவே, சட்ட விதிமுறைகளின்படி அங்கே நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் பழக்கமும் கிடையாது. இந்த நிலைமை அந்த மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும், கிராமங்களிலும் நிலவுகிறது எனலாம்.
எனவே, முதல்வர் மம்தா பானர்ஜி தொழில் தொடங்க சிங்கப்பூர் நாட்டவரை அழைக்கும் முன்னரே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கொல்கத்தா மாநில தலைமை செயலகத்தில் கூட்டி, நிலத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் நடவடிக்கையைத் தொடங்கியிருந்தாலும் பலன் இருந்திருக்காது. ஏனெனில் அந்த மாநில உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டது எனக் கூறுகிறார்கள் அங்குள்ள அதிகாரிகள்.
மேலும், குறிப்பிட்ட அந்த 1,000 ஏக்கர் நிலப் பகுதிக்கு செல்ல 29 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை என்.எச். 60-லிருந்து பிரிந்து கிராமப்புற சாலையில் பயணம் செய்ய வேண்டும். அந்த சாலை மிகவும் மோசமான மேடு பள்ளங்களுடன் இருப்பதால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல இடுபொருள்களையும், கருவிகளையும் ஏற்றிச் செல்லும் பெரிய லாரிகள் பயணிக்க முடியாது.
29 கி.மீ. நீள சாலையின் கடைசி 11 கி.மீ. தூரம் நான்கு மீட்டர் அகல ஒருவழிச்சாலை. தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகள் குறைந்தபட்சம் 14 மீட்டர் அகலத்துடன் நான்குவழிச் சாலைகளாக இருக்க வேண்டியது அவசியம்.
இதுபோன்ற சாலைகளை அந்தப் பகுதியில் அமைக்க, குறைந்தது ஒன்பது மாதங்கள் ஆகும் எனக் கூறுகிறார்கள் அந்த பகுதியின் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
மேற்கு வங்க அரசே நினைத்தாலும் அந்த மாநிலத்தில் சில பிரச்னைகளை சமாளிப்பது மிகவும் கடினம். உதாரணமாக, இந்த சாலை செல்லும் பல இடங்களில் மிக நெருக்கமான குடிசைகள், கான்க்ரீட் வீடுகள் உள்ளனவாம்.
அந்த வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீடுகளை வாங்கி, பின் அவற்றை அப்புறப்படுத்தி சாலைகளை அமைப்பது முடியாத ஒரு காரியம் எனக் கூறுகிறார்கள்.
அடுத்து இந்த 1,000 ஏக்கர் நிலத்தில் பல பெரிய தொழிற்சாலைகளை நிறுவ அடிப்படை தேவைகளில் ஒன்று தாராளமான நீர் வரத்து. அந்த நிலத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் சிலபதி எனும் நதியிலிருந்துதான் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும். சிலபதி நதி எல்லா பருவங்களிலும் நீர்வரத்துள்ள ஒரு நதியல்ல.
தொடர்ந்து தாராளமாக நீர்வளம் தேவைப்படும் கனரக தொழில்களைத் தொடங்க, அந்த நிலப் பகுதியிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ள குப்னராயன் எனும் வற்றாத நதியிலிருந்து நீர் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆக மொத்தத்தில் இவை எதுவுமே சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, இந்த விவரங்கள் முழுமையும் சிங்கப்பூரின் பிரதமர், அந்நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பெரிய தொழிலதிபர்களுக்குத் தெரிய வரும்போது, நம் நாட்டு அரசியல் தலைவர்களைப் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படை அம்சமான அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய "தெளிவுரை'யை மேற்கு வங்க முதல்வர் பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
நேர்மையான அரசியல்வாதியாக இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராவது வேறு; திறமையான முதல்வராக உருவாகி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வகுத்துத் திறம்பட நிர்வகிப்பது வேறு. இதனை நிரூபித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

"தீண்டாதே, தீண்டாதே'

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றில் சிறந்த உரையாகக் கருதப்படுகிறது. 121 ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் சிகாகோ சிறப்புரை அன்றாட வாழ்க்கையில் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய அறிவுரையாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் வெள்ளிவிழா மாநாடு வாஷிங்டன் மாகாணம் பால்டிமோரில் நடந்தது. அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. மூன்று நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
சில இடங்களுக்குச்சென்று பார்ப்பதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்தார்கள். முதலில் சிகாகோ நகர் என்று தெரிந்ததும், பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்ட சர்வதேச மாநாடு நடைபெற்ற கட்டடத்தையும், எட்டு மணிநேர வேலை கோரி அணிதிரண்ட தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான ஹே மார்க்கெட்டையும் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தேன். சிகாகோ நண்பர்கள் என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.
உலக மதங்களின் பார்லிமெண்ட கட்டடத்துக்கு சென்று கேட்டோம். கட்டடத்தின் உள்ளே இருக்கும் ஒரு பகுதியைக் காட்டினார்கள். அவர்கள் சர்வதேச மதங்கள் மாநாடு நடைபெற்ற இடத்திற்குச் செல்லும் வழியைத் துல்லியமாகத் தெரிவித்தார்கள்.
அங்கு சென்றவுடன் பெரிய வீதியில் "விவேகானந்தர் வீதி' என்று குறிப்பிட்டுள்ள கைகாட்டியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தோம். பெரிய மாளிகை போன்ற அரங்கு. புதுப்பிக்கப்பட்டிருந்தது. எங்களை அழைத்துச் சென்று மாநாடு நடந்த அரங்கையும், சுவாமி விவேகானந்தரின் இருக்கையையும் காட்டினார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களும் இருந்தன.
120 ஆண்டுகளானாலும் மறக்காமல் பாதுகாக்கப்பட்டிருக்கும் வரலாற்றுப் பதிவுகளைக் கண்டு திகைப்படைந்தேன். நம் நாட்டில் வரலாற்றுப் பதிவுகளில் போதுமான அக்கறையும் ஈடுபாடுகளுமில்லாததை எண்ணி வேதனையடைந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
சிகாகோ மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தருக்கு வயது 29 தான். இள வயதுத் துறவி. கம்பீரமான தோற்றம். அறிவும், ஆற்றலும், தாய்நாட்டின் இழிநிலை கண்டு ஆதங்கமும் விவேகானந்தரின் முகத்தோற்றத்தில் காணப்பட்டன.
சர்வமத சபை மாநாடு சிகாகோவில் 1893 செப்டம்பர் 11-இல் துவங்கி, 17 நாள்கள் நடந்தன. முதல் நாளே நான்காவது பேச்சாளராக பிற்பகலில் சுவாமி விவேகானந்தர் பேசத் துவங்கினார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் விவேகானந்தர் தான் இளைஞர். முன்னே பேசிய அனைவரும் மேலைய நாட்டு வழக்கப்படி, "சீமான்களே! சீமாட்டிகளே!' என்று பேச்சைத் துவங்கினார்கள்.
இளம் துறவியான விவேகானந்தர் கம்பீரமாக எழுந்தார். "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!' என்று துவங்கினார். கையொலி ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.
"எல்லா மதங்களும் சகிப்புத் தன்மையை போதிக்கின்றன. மத வெறி, உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து நாகரிகத்தை அழித்து, உலகை நிலைகுலையச் செய்துவிட்டது. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலையை எய்திருக்கும். இன்று காலை இம்மாநாட்டின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிக்கும் மற்ற இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கப்பட்ட சாவுமணி என்று நான் திடமாக நம்புகிறேன்.'
இதுவே சிகாகோ மாநாட்டில் விவேகானந்தரின் முதன் முழக்கமாகவும், உலக அரங்கில் இந்திய இளம் துறவியின் முத்தான பேச்சாகவும் இன்று வரை விளங்கிவருகிறது. 17 நாள்கள் நடந்த மாநாட்டில் ஆறு முறை பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியிருக்கிறார்.
15.9.1893 அன்று விவேகானந்தர் தனது இரண்டாவது உரையை நிகழ்த்தினார். கடல் தவளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. கிணற்றில் விழுந்த கடல் தவளைக்கும், கிணற்றுத் தவளைக்கும் கடலின் ஆழம், அகலம் பற்றி விவாதம் நடந்த கதையை நகைச்சுவையுடன் கூறினார்.
"காலம் காலமாக இருந்து வருகிற தொல்லை இதுதான். நான் இந்து. என் சிறிய கிணற்றுக்குள் இருந்து கொண்டு, என் சிறிய கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்துவன் தனது மதமாகிய சிறு கிணற்றுக்குள் இருந்துகொண்டு தன் கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக!' என்று முடிக்கிறார்.
27.9.1893-இல் விவேகானந்தரின் இறுதி உரையில் இந்த மாநாட்டின் மூலம் உருவாகியுள்ள ஒருமைப்பாடு ஏதாவது ஒரு மதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிடைக்கும் என்று யாராவது நம்பினால் அது வீணானது.
விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும், காற்றும், நீரும் அதைச்சுற்றிப் போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிறதா? இல்லை. அது செடியாகத் தனது வளர்ச்சி நியதிக்கேற்ப வளர்கிறது. காற்றையும், மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு சத்துப்பொருளாக மாற்றிக் கொண்டு செடியாக வளர்கிறது.
மதங்களின் நிலையும் அதுவே. "தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால், அவர்களைக் குறித்து என் இதய ஆழத்திலிருந்து பரிதாபப்படுவதுடன் இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் "உதவி செய், சண்டை செய்யாதே! ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும். வேறுபாடு வேண்டாம்' என்று எழுதப்படும் என்று சுட்டிக்காட்ட வேண்டும்' என்று முடிவு செய்கிறார்.
39 ஆண்டுகளே வாழ்ந்தவர். உணர்ச்சி பிழம்பாக வாழ்ந்தவர். "ஞானரூபேந்திரன்' என்று விவேகானந்தருக்கு பாரதி புகழாரம் சூட்டியுள்ளார். "துவராடை அணிந்த புரட்சித் துறவி விவேகானந்தர்' என்று பொதுவுடைமை இயக்கத்தின் ஜீவா அவரைப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் தனது நான்காண்டுப் பயணத்தை முடித்து இந்தியாவுக்குத் திரும்பினார். 1897 ஜனவரி 26-ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள பாம்பன் வந்திறங்கினார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டுக்குச் செல்வதற்கு பரிந்துரை செய்தவரும், நிதியுதவி செய்தவருமான ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, பாம்பன் சென்று விவேகானந்தரை வரவேற்றார்.
ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை போன்ற இடங்களில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மானாமதுரை, சிவகங்கை இரு ஊர்களிலும் விவேகானந்தர் பேசிய கருத்துக்கள் இன்றும் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய அரிய கருத்துக்களாகும்.
"முட்டாள் தனமான பழைய விவாதங்களையும் பொருளற்றவற்றைப் பற்றிய சண்டைகள் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்! கடந்த அறுநூறு எழுநூறு ஆண்டுகளாக நாம் எவ்வளவு இழிநிலை அடைந்துள்ளோம் என்பதை எண்ணிப் பாருங்கள். நமது மதம் சமையலறைக்குள் அடங்கிவிடுமென்ற ஆபத்துள்ளது.
நாம் எல்லாம் வெறும் "தீண்டாதே, தீண்டாதே' என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். நமது மதம் சமையல் அறையில் இருக்கிறது. பானை தான் நமது கடவுள், என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால், நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம்.
இத்தகைய நிலைகளை மாற்றவேண்டும். உறுதியோடு எழுந்து நிற்கவேண்டும். செயல்திறனும், வலிமையும் மிக்கவர்களாக வேண்டும். ஓர் உயரிய லட்சியத்துக்காக அர்ப்பணிப்பதால் மட்டுமே வாழ்க்கை மதிப்பு பெறுகிறது' என்று பேசினார்.
சுவாமி விவேகானந்தர் ஆன்மிகவாதி! ஆனால், எதுவும் தானாக மாறிவிடும் என்ற உணர்வில் செயல்படாமலிருப்பதை எதிர்த்தவர்.
"எழுமின், விழிமின், இறுதி லட்சியம் ஈடேறும்வரை போராட வேண்டும்' என்று அறைகூவல் விடுத்து விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கு வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர்.
அவர் சிகாகோ சர்வமத சபையில் ஆற்றிய சொற்பொழிவை இன்று நினைவுகூர்வோம்

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?


சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

கருத்துகள்



ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும். 


pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா

குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா



குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




தமிழ்நாடு அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி நிர்வாகம் இணைந்து குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை செயல்படுத்தி வருகிறது.




இந்த மன்றத்தின் முன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் பள்ளியில் நடைபெற்றது.    
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத் குமார் பேசும்போது மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் சமூக மாற்றத்தினை உருவாக்க முடியும் குறிப்பாக ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை தற்போது பெரிதாகாமல் தடுக்க பட்டுள்ளதாக ஆய்வில் கண்டு பிடிக்க பட்டுள்ளது இதுபோன்று நுகர்வோர் விழிப்புணர்வினை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்றார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது நமது தேவையை விட அதிகமான பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம்.  பல பொருட்கள் ஆடம்பரத்திற்க்காகவும், அடுத்தவர் பயன் படுத்துகிறார் என்பதற்காகவும், விளம்பரத்தில் சொல்லபட்டதற்க்கவும் பயன் படுத்து கிறோம் இதனால் தேவையற்ற செலவினங்களை உருவாக்கு கிறது.  மாணவர்களிடையே உணவு முறைகள் மாறி வருகிறது.  இதனால் உடலில் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.  ஊட்ட சத்து பானங்கள் வெறும் விளம்பரமே,  அவற்றை தவிர்த்து வழக்கமான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன். கணேஷன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.  








நுகர்வோர் மைய பந்தலூர் வட்டார அமைப்பாளர் தனிஸ்லாஸ் சுகாதார வாழ்வு குறித்து பேசினார்.  











நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியை அன்சி வரவேற்றார்.  முடிவில் அலுவலக உதவியாளர் கங்காதரன் நன்றி கூறினார்.































pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/